சாலையில் 30 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்.. அதிர்ச்சி அடைந்த மக்கள்!

 
Chennai

சென்னை அம்பத்தூரில் 100 அடி சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மேனாம்பேடு - கருக்கு பிராதான சாலையில் இன்று அதிகாலை திடீர் என பள்ளம் ஏற்பட்டது. சாலையில் சுமார் 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அதிகாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இப்பள்ளத்தை பார்த்ததால் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.

chennai

பள்ளத்திற்கு அருகே யாரும் செல்லாத வகையில் பாதுகாப்பு அமைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் பள்ளம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில் பாதாள சாக்கடை இணைப்புக்கு மேல் செல்லும் சாலையில் சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அம்பத்தூரில் இருந்து கொரட்டூர் செல்வதற்கு வாகன ஓட்டிகள் இந்த சாலையைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், பீக் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என்பதால் முழு வீச்சில் சாலையை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  

இயந்திரங்கள் மூலம் பள்ளத்தை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் அம்பத்தூரில் உள்ள கொரட்டூர் பிரதான சாலையில் கடந்த வாரம் இதேபோன்று திடீரென பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web