ஏரியில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி... மீன் பிடிக்க சென்ற போது விபரீதம்!!

 
Kanakammachathram

கனகம்மாசத்திரம் அருகே மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் ராமாபுரம் பகுதியில் உள்ள இருளர் காலனியில் வசித்து வருபவர் அர்ஜுனன். கூலித் தொழிலாளியான இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சுரேஷ் (14) என்ற மகனும் காமாட்சி (12) என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் சுரேஷ் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளான். 

water

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் அதே கிராமத்தைச் சேர்ந்த சக நண்பர்கள் இருவருடன் ராமாபுரத்தில் உள்ள ஒரு ஏரியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளான். அப்போது நண்பர்களுடன் சுரேஷ் ஏரியில் குதித்து விளையாடி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக சுரேஷ் தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கியுள்ளான். 

நீண்ட நேரமாகியும் சுரேஷ் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள் அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து சென்ற அப்பகுதி மக்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுவன் சுரேஷ் உடலை வெளியே எடுத்து வந்தனர். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Kanakammachathram PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார் பலியான சுரேஷின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web