10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 28 வயது இளம்பெண் கைது.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்!

 
Theni

போடி அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சில்லமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி (28) என்பவர் குழந்தைகள் பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் பணிபுரியும் காப்பக விடுதியில் தங்கி பயின்று வரும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 10 வயது சிறுவன், 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

Rape

இந்த நிலையில், இந்த சிறுவனுக்கு முனீஸ்வரி இரவில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த சிறுவன் அந்த காப்பகத்தில் இருந்து போடிநாயக்கனூர் சில்லமரத்துப்பட்டி அருகே உள்ள மற்றொரு தனியார் தொண்டு நிறுவன காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பள்ளி சிறுவன் மனரீதியாக பாதிப்புகளுடன் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காப்பக விடுதி பராமரிப்பாளர்கள் கேட்டபோது, தான் முதலில் தங்கி இருந்த விடுதியில் முனீஸ்வரி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது கூறியதாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினர் தேனி குழந்தைகள் நல அலுவலர் விஜயலட்சுமியிடம் தகவல் அளித்தனர்.

women-arrest

இதையடுத்து சிறுவன் மற்றும் முனீஸ்வரியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானதை அடுத்து முனீஸ்வரி மீது போடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, முனீஸ்வரியை கைது செய்தனர். 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 28 வயது இளம்பெண் கைதான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web