தேநீர் விருந்து புறக்கணிப்பு ஏன்? சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

 
Property-Tax-Increase-Inevitable-says-CM-MK-Stalin

தமிழ்புத்தாண்டையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்புத்தாண்டையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது. முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. திமுக கூட்டணி கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை. ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக கவர்னர் மாளிகையில் கவனிப்பாரன்றி முடங்கிக்கிடக்கின்றது. நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்?. நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழ்நாடு மக்களை அவமதிப்பதாகும்.

நூற்றாண்டு கண்ட சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னர் மாளிகையில் முடங்கி கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நலன் கிடைக்கிறது என்றால் நான் வலியையும், அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.

ஆளுநர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கும், எனக்கும் சுமூக உறவு இருக்கிறது. நான் ஆட்சி நடத்தும் விதத்தை பொதுமேடையிலேயே அவர் பாராட்டி பேசியிருக்கிறார். ஆளுநருக்கு உண்டான மரியாதையை தொடர்ந்து வழங்குவோம்.

நீட் விலக்கு மசோதா கிடப்பில் கிடப்பது குறித்து விவாதிக்க தேவைப்பட்டால் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு எடுத்திருப்பதாக ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளன.” என்று கூறினார்.

From around the web