சோகம்! திட்டக்குடி அருகே ஏரியில் மூழ்கி அண்ணன் - தம்பி பலி!

 
Pennadam

பெண்ணாடம் அருகே ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ள எரப்பாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயவேல் (40). லாரி ஓட்டுநரான இவருக்கு நித்திஷ் (12), சூர்யா (8) என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் நித்திஷ் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், சூர்யா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை அண்ணன்- தம்பி இருவரும் பள்ளிக்கு சென்றனர். பின்னர் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள புது ஏரிக்கு சென்றுள்ளனர்.

swim

அப்போது சூர்யா எதிர்பாராத விதமாக ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நித்திஷ், தனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும், எப்படியாவது தனது தம்பியை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏரியில் இறங்கி உள்ளான். இதில் தண்ணீரில் தத்தளித்த இருவரும் ஒருவன் பின் ஒருவராக மூழ்கினர். 

இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் நித்திஷ், சூர்யா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே நித்திஷ், சூர்யா ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Avinangudi-PS

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவினங்குடி போலீசார், பலியான 2 சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

From around the web