சோகம்! மாடு மீது பைக் மோதி விபத்து... கல்லூரி மாணவர் கார் சக்கரத்தில் சிக்கி பலி!!

 
accident

மாமல்லபுரம் அருகே மாடு மீது பைக் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் கார் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவரதன் ரெட்டி (21). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் சகமாணவரான சவுத்ரி (22) என்பருடன் மாமல்லபுரம் நகரை சுற்றி பார்க்க இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றுள்ளார். பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தனர். 

accident

இதையடுத்து மீண்டும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் சென்னை திரும்பி கொண்டிருந்த போது வடநெம்மேலி அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே வந்த பசுமாடு ஒன்று அதிவேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த விஷ்ணுவரதன் ரெட்டி ரத்தவெள்ளத்தில் சாலையில் விழுந்த நிலையில், பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் பின் சீட்டில் அமர்ந்து வந்த மாணவர் சவுத்ரி சர்வீஸ் சாலையில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

mamallapuram

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார், பலியான விஷ்ணுவரதன் ரெட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில் கிழக்கு கடற்கரை சாலையில் பசுக்களால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதால், பொறுப்பில்லாமல் மாடுகளை சாலைகளில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

From around the web