இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐப்பசி மாத துலா உற்சவத்தில் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஐப்பசி மாதக் கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.

இந்த நிலையில், மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. 

Local-holiday

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1-ம் தேதி துலா உற்சவம் தொடங்கியது. 

அதைத்தொடர்ந்து 10 நாள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான திருக்கல்யாணம் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Leave

பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சவங்கள் தொடங்கியுள்ள நிலையில் இன்று (நவ. 16) புதன்கிழமை கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.

From around the web