வாலாஜாபேட்டை அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்... கொலை செய்த காதலன் கைது!!

 
murder

வாலாஜாபேட்டை அருகே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய இளம்பெண்ணை முன்னாள் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தடுப்பணை அருகே உள்ள வனப்பகுதியில் இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வாலாஜாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து காவல் நிலையங்களில் பதிவான காணாமல் போனவர்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மீட்கப்பட்ட இளம்பெண், காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த ரேஷ்மாலதா என்பது தெரியவந்தது. 

murder

அவரது பெற்றோரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 22-ம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வாலாஜா அணைக்கட்டு பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது,  ரேஷ்மாலதா மர்ம நபர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்வது பதிவாகியிருந்தது.

அந்த காட்சியை அடிப்படையாக வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அந்த மர்மநபர் விஷாரம் பகுதியை சேர்ந்த குமரன் என்பது தெரியவந்தது. நர்சிங் டிப்ளமோ முடித்த ரேஷ்மாலதா சென்னையில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த போது சிகிச்சை பெறுவதற்காக சென்ற குமரன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இந்த காதல் தொடர்ந்து வந்த நிலையில், ரேஷ்மாலதாவின் பெற்றோர்கள் சென்னையில் அழகுபொருட்கள் தயாரிக்கும்  தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கோபிநாத் என்பவரோடு திருமணம் செய்ய முடிவெடுத்து கடந்த 2020-ல் திருமணம் ஆகியுள்ளது. அதே போல குமரனுக்கும் திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

valagapetai policestation

ரேஷ்மாலதாவிற்கு 5 மாத கைக்குழந்தை இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குமரனோடு பழகி வந்துள்ளார். மேலும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த நிலையில் ரேஷ்மாலதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குழந்தையை சென்னைக்கு எடுத்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ரேஷ்மாலதா கடந்த 22-ம் தேதி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது தனிமையில் சந்திப்பதற்காக வாலாஜா தடுப்பணை அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு ரேஷ்மாலதாவும் குமரனும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். தனிமையில் இருக்கும்போது முதலில் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து  கணவருடன் பிரச்சினை உள்ளதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமரனை ரேஷ்மாலதா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த குமரன் திடீரென, ரேஷ்மா லதா அணிந்திருந்த துப்பட்டாவை கொண்டு அவரது கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். தொடர்ந்து ஆதாரங்கள் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில், ரேஷ்மா லதா வைத்திருந்த செல்போன் மற்றும் அணிந்து இருந்த 5 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு பெங்களூருக்கு சென்று தலைமறைவாகி உள்ளார். செல்போன் சிக்னல் உதவியோடு தனிப்படை போலீசார் குமரனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web