அதிவேகமாக பைக்கில் சென்ற மாணவர்கள்... மேம்பால தடுப்பு சுவற்றில் மோதி கல்லூரி மாணவர் பலி!! 

 
Chennai

சென்னை அமைந்தகரை மேம்பாலச் சுவற்றில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆலன் ஜெர்மான்ஸ் (21). அதேபோல் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தருண்குமார் (21), விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). இவர்கள் 3 பேரும் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து, பூந்தமல்லியில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் 4-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை கோவளம் கடற்கரையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக மாணவர்கள் 3 பேரும் ஒரே பைக்கில் சென்றனர். மோட்டார் பைக்கை ஆலன் ஜெர்மான்ஸ் ஓட்டினார். மற்ற 2 பேரும் அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்தனர். அமைந்தகரை  மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியது. 

Bike

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர்கள் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்தனர்.  அதிகாலை நேரம் என்பதால், ஆட்கள் நடமாட்டமின்றி சுமார் அரை மணி நேரம் அவர்கள் தவித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆலன் ஜெர்மான்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது நண்பர்களான தருண்குமார், பிரவீன்குமார் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ஆலன் ஜெர்மான்ஸ் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

AnnaNagar-PS

கோவளம் கடற்கரையில் சூரிய உதயத்தை பார்க்கும் ஆர்வத்தில் 3 பேரும் பைக்கில் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web