சாலையோர பாதுகாப்புத் தடுப்பில் பாய்ந்த டெம்போ டிராவலர்... ஒன்றரை வயது குழந்தை உள்பட 2 பேர் பலி!!

 
Villupuram

வானூர் அருகே சாலையோரம் உள்ள தடுப்பு வேலியில் வேன் மோதிய கோர விபத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் சாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கர் (56), சுஜாதா (62), சுகந்தன் (38). இவர்கள் 3 பேரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த தங்கள் உறவினர்களை அழைத்து வருவதற்காக டெம்போ டிராவலர் மூலமாக நேற்றிரவே சென்னை விமான நிலையத்துக்கு சென்றனர். வாகனத்தை சாரம் பகுதியை சேர்ந்த துரை என்பவர் ஓட்டினார். பின்னர் அவர்கள், பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த உறவினர்களான சுரேஷ் (60), தமிழரசி (59), விக்னேஸ்வரன் (35), அலுயன் (36), அவரது மனைவி வினோதினி (35), ஒன்றரை வயது மகள் விநாலி ஆகியோரை அழைத்து கொண்டு புதுச்சேரி நோக்கி வந்தனர்.

Accident

திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கீழ்கூத்தபாக்கம் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ தாறுமாறாக ஓடியது. சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்புக்கட்டையில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரும்பு தடுப்பு வேனின் முன்பகுதியில் சொருகி பின்பகுதியில் வெளியே வந்தது. இருப்பினும் அந்த வேன் இரும்பு தடுப்புடன் சுமார் 20 அடி தூரம் சென்று நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் அலறி கூச்சல் போட்டனர்.

இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயங்களுடன் தவித்த ஓட்டுநர் உள்பட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Kiliyanur PS

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த சுரேஷ், குழந்தை விநாலி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் உயிரிழந்த சுரேஷின் மனைவி தமிழரசி உள்ளிட்ட 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web