இனி எங்கிருந்தும் பட்டா வாங்கலாம்.. தமிழ்நிலம் மென்பொருள் சேவை.. தொடக்கி வைத்த முதல்வர்!!
பட்டா மாறுதலுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த உடன், பட்டாவை மாற்றம் செய்ய வாங்கப்பட்டு அந்த பகுதி வி.ஏ.ஓ. அல்லது தாலுகா அலுவலகம் செல்லவேண்டும். அங்குதான் ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை இருந்தது. இதனால் பணம் மற்றும் நேரம் வீணானது.
பொதுமக்களின் இந்த சிரமத்தை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் வசதியை அரசு கொண்டு வந்தது. எனினும் ஆவணங்களை தாலுகா அலுவலங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலம் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக அவர் திறந்து வைத்தார்.
நகர்ப்புற புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் முதல்வர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். tamilnilam.tn.gov.in/citizen-ல் பெயர், செல்போன் எண், முகவரி, இ-மெயில் முகவரியில் பட்டா மாறுதலுக்கு இனி விண்ணப்பிக்கலாம்.
இந்த இணையதளம் மூலம் உட்பிரிவு , செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்த ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கட்டணங்கள் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும்.