மிஸ் கூவாகம் அழகி போட்டி: சென்னையைச் சேர்ந்த திருநங்கை சாதனா மிஸ் கூவாகம் ஆக தேர்வு!!

 
koothandavar-temple-beauty-contest

விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் போட்டியில், சென்னையைச் சேர்ந்த திருநங்கை சாதனா பட்டம் வென்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கூவாகம் என்ற பகுதியில் இருக்கும் இந்த கூத்தாண்டவர் கோவில் திருநங்கைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவிலில் இருக்கும் மூலவர் அரவான். இங்கு சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில், சித்ரா பௌர்ணமி நாளானது மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டது.

அரவானை கணவனாக நினைத்துக்கொண்டு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்கு இந்த கோவிலில் மிகவும் விசேஷம். இந்த சடங்கில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்துள்ளனர்.

கடந்த 5-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியோடு கூத்தாண்டவர் கோவில் திருவிழா தொடங்கியது. கூவாகம், நத்தம், தொட்டி, குப்பம், வேலூர் உட்பட ஏழு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தங்கள் வீடுகளில் இருந்து கூழ் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து கூத்தாண்டவர் கோவில் முன்பாக வைத்து படையல் செய்தனர். பின்னர் படையில் இடப்பட்ட கூழ் அங்குள்ள பெரிய கொப்பரையில் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

koothandavar-temple-beauty-contest

இந்த திருவிழாவிற்கு இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திருநங்கைகள் இங்கு வந்து குவிந்துள்ளனர். 18 நாட்களும் தினம் தினம் ஒரு நிகழ்ச்சி என கூவாகம் கிராமமே களைகட்டியுள்ளது. கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் ஆண்டுதோறும் விழா எடுத்து வழிபடுகின்றனர்.

திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் நேற்று மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.

koothandavar-temple-beauty-contest

இதற்கு முன்னிஜி நாயக் தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ், நடிகர் சூரி, நடிகை நளினி, விழுப்புரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள் நடைபெற்றது. அதன் பிறகு திருநங்கைகளின் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் மிஸ் திருநங்கை அழகிப்போட்டிக்கான தேர்வு நடந்தது. இதில் சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

koothandavar-temple-beauty-contest

போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 50 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் 2-ம் சுற்றுக்கான அழகிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 50 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 5 பேர் 3-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் மிஸ் திருநங்கையாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 3 பேருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், பொது அறிவுத்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த மதுமிதா 2-ம்இடத்தையும், சென்னையை சேர்ந்த எல்சா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

koothandavar-temple-beauty-contest

இவர்களில் முதலிடம் பிடித்த சாதனாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டு ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் 2-வது இடம் வந்தவருக்கு ரூ. 10 ஆயிரமும், 3 வது பரிசு ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதேபோல் நடனப்போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 19-ம் தேதி திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 20-ம் தேதி காலை தேர் திருவிழாவும் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளை சேலை உடுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

From around the web