இளையராஜாவை காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்

 
Vijayakant

மேலும் விமர்சனம் செய்து இளையராஜாவை காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பீட்டு எழுதிய கருத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதேநேரத்தில் இளையராஜா கருத்துக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்தனர். இதற்காக இணையதளங்களிலும் பெரிய கருத்து மோதல் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல இசையமைப்பளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

அண்ணல் அம்பேத்கர், பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கும் அவரவர்கள் துறையில் அனைவருக்கும் எடுத்து காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோல தான் இங்கு யாரையும் யாருடன் ஒப்பிட்டு பேச முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்.

இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது.” என்று கூறப்பட்டுள்ளது.

From around the web