பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
Mon, 25 Jul 2022

அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அதன் படி, இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனோ பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 2021 - 2022 கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்குவதற்கு அரசு ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில், 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் அனைத்து மாவட்ட மேல்நிலை பள்ளிக்கூடங்களுக்கு ஏற்கனவே சைக்கிள்களின் உதிரி பாகங்கள் வந்து இறங்கின. அங்கு சைக்கிள்களை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்தவுடன், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.