மாணவிகளுக்கு ரூ. 1,000 உதவித்தொகை... விண்ணப்பிக்க வரும் 18-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள ரூ.1,000 உதவித்தொகைக்கான பதிவை வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றிய அமைக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.
இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி இருந்தது. அதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை மாணவியரிடம் இருந்து பெற வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து உள்ளனர். இதற்கான கடைசி தேதி கடந்த 10-ம் தேதி வரை என கூறப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.