கோவில் கும்பாபிஷேகத்தில் வெடி விபத்து:  9 வயது சிறுவன் பலி! பெரம்பலூர் அருகே சோகம்

 
perambalur

பெரம்பலூர் அருகே கோவில் திருவிழாவின் போது நடைபெற்ற வானவேடிக்கையின் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அரசலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வானவெடி மற்றும் அதிர்வேட்டு வெடிகள் வெடிக்கப்பட்டது.

boy-dead-body

அப்போது வெடிக்கப்பட்ட வெடிகளில் ஒன்று சிதறி அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராஜ்குமார் என்பவரது மகன் லலித் கிஷோர் (9), புனிதா (32), சுரேஷ் (36), பிரியா (21) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுரேஷ், பிரியா, புனிதா ஆகிய 3 பேருக்கும் லேசான காயம் என்பதால் அங்கேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிறுவன் லலித் கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கொண்டு வந்த சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் லலித் கிஷோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

Arumbavur

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வானவேடிக்கை நடத்திய நீலகண்டன் (27) மணிகண்டன் (34) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் விழாவில் நடத்தப்பட்ட வானவேடிக்கையில் சிறுவன் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web