ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு.. எப்போது தேர்தல்?

 
TN Election

திருமகன் ஈவெரா மறைவை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து ஜனவரி 5-ம் தேதி இறுதிச் சடங்குகள் நடைபெற்று திருமகன் ஈவேரா உடல் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்றைய தினம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Thirumagan

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொகுதி காலியாக இருக்கும் தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பி வைப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தொகுதியின் உறுப்பினர் மரணமடைந்தாலோ, அல்லது ராஜினாமா செய்தாலோ, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் அந்த தொகுயில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. இதனால் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

election

சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறவுள்ள முதல் சட்டமன்ற இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web