குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: ஒன்றிய அரசு அறிவிப்பு

பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் அனுப்பலாம் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய தொழிலாளர் நல ஆணையர் அருண் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் 2022-2023-ம் நிதி ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்படும். https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30-ந் தேதி ஆகும். மற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31-ந் தேதி ஆகும்.’ என்று கூறப்பட்டுள்ளது.