கணவன் - மனைவி இடைய தகராறு.. பூச்சி மருந்து குடித்து தந்தை, மகன் தற்கொலை.. திருத்தணியில் பரிதாபம்!

 
thiruttani

திருத்தணி அருகே குடும்பத் தகராறு காரணமாக  பூச்சி மருந்து குடித்து தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அரும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் பரசுராமன் (48). இவரது மனைவி சந்திரா (40). இந்த தம்பதியினருக்கு காமாட்சி என்ற மகளும், லோகேஷ் (19) என்ற மகனும் உள்ளனர். இதில், லோகேஷ் திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

poison

இந்த நிலையில் கடந்த வாரம் பரசுராமனுக்கும் அவரது மனைவி சந்திராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சந்திரா கணவரிடம் கோபித்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த லோகேஷ் பல முறை அவரது தாயை நேரில் சந்தித்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இருப்பினும், சந்திரா வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதால் மனமுடைந்த லோகேஷ் பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் லோகேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

tiruttani-PS

மகனின் இந்த நிலைக்கு நான் தான் காரணம் என நினைத்த தந்தை மருத்துவரிடம் காட்டுவதற்காக எடுத்து சென்ற பூச்சி மருந்தை அவரும் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். பரசுராமனும், லோகேஷும் தனித்தனி அறையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web