சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் தடை!! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 
shathuragiri

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலை மிகவும் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக விளங்குகிறது. இந்த பகுதியை சுற்றியுள்ள மலைகளின் அமைப்பு சதுர வடிவில் காணப்படுவதால் சதுரகிரி என பெயர் பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த மலைக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைதோப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியில் இருந்தும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும் மலைப்பாதைகள் உள்ளன. இதில் வத்திராயிருப்பு பாதை சற்றே சுலபம் என்பதால் பெரும்பாலான பயணிகள் இதைதான் பயன்படுத்தி வருகின்றனர்.

sathuragiri

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை (நவ. 21) முதல் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருகிற 23-ம் தேதி கார்த்திகை மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை (நவ. 21) முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனாலும், தாணிப்பாறை, வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை ஆகிய ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. 

sathuragiri

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, நாளை முதல் வருகிற 24-ம் தேதி வரை மலை அடிவாரத்துக்கோ, கோவிலுக்கு தரிசனம் செய்யவோ பக்தர்கள் வர வேண்டாம். அதேநேரம் கோவிலில் பிரதோஷம், அமாவாசை பூஜைகள் வழக்கம் போல் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web