ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்; பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு

 
Erode

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. 46 வயதான இவர், கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருமகன் ஈவெரா மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதனைத்தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Thirumagan

இதையடுத்து தற்போது, இந்திய தேர்தல் ஆணையமும் இந்த தொகுதியை காலி என்று அறிவித்துள்ளது. தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். பொதுவாக இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனத் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்தன. அதேபோல் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி இருப்பார் என்று மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

Election commission

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:

  • வேட்புமனு தாக்கல் தொடக்கம் - ஜனவரி 31
  • வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் - பிப்ரவரி 7
  • வேட்புமனு பரிசீலனை - பிப்ரவரி 8
  • வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் - பிப்ரவரி 10
  • வாக்குப்பதிவு - பிப்ரவரி 27
  • வாக்கு எண்ணிக்கை - மார்ச் 2

From around the web