படுத்த படுக்கையான தாய் தற்கொலை... திருமணம் நடைபெற இருந்தநிலையில் மகள் எடுத்த விபரீத முடிவு!!
ராணிப்பேட்டை அருகே தாய் மீது கொண்ட பாசத்தால் திருமணத்தையும் மறந்து மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள கரிவேடு கிராமத்தில் வசித்து வருபவர் மகாலிங்கம். ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி மனைவி ஜோதிலட்சுமி, மகள்கள் வைஷ்ணவி, பவித்ரா மற்றும் பவானிசங்கர் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜோதிலட்சுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின் படுத்த படுக்கையாய் ஆன ஜோதிலட்சுமியை அவரது மகள்கள் கவனித்து வந்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல படுக்கை புண்ணால் அவதிப்பட்டு வந்த ஜோதிலட்சுமி மிகுந்த கவலையில் இருந்து வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த ஜோதிலட்சுமி விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
இதற்கிடையே அவரது மூத்த மகளான வைஷ்ணவிக்கு ஆற்காடு வளவனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் 5-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் தான் வீட்டில் யாரும் இல்லாத போது, தாய் மீது அதிக பாசம் கொண்ட வைஷ்ணவியிடம் தனக்கு அரளி விதை அரைத்துக் கொடுத்து விடுமாறு ஜோதிலட்சுமி கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன வைஷ்ணவி, சமாதானப்படுத்த முயன்றும் அது தோல்வியில் முடிந்துள்ளது. திருமணத்திற்கு வெறும் 13 நாட்களே உள்ள நிலையில், தாய்க்கு அரளி விதையை அரைத்து கொடுத்ததோடு தானும் அதை குடித்து தற்கொலைக்கு வைஷ்ணவி முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட குடும்பத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டட நிலையில், தாய் ஜோதிலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் வைஷ்ணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் மீது கொண்ட பாசத்தால் திருமணத்தையும் மறந்து மகள் அரளி விதை குடித்து உயிருக்கு போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.