ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி... தொல்.திருமாவளவன் கைது!!

 
Thirumavalavan

தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு சட்டபேரவையின் நடப்புண்டு முதல் கூட்டத் தொடர் கடந்த 9-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையாற்றியபோது, அறிக்கையில் சில சில வார்த்தைகளை சேர்த்தும், சில வாக்கியங்களை விடுத்தும் வாசித்தது சர்ச்சையானது.

Thirumavalavan

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற போராட்டத்தில், ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.

முற்றுகைப் போராட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு செல்பவர்கள், ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று ஆளுநர் பேசுவது, சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டார்.

VCK

தொடர்ந்து பேசிய திருமாவளவன், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிலும் ஆளுநர் இல்லாமல் பேரவை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பாஜக ஆதரவாளர்களை ஆளுநராக நியமிக்க கூடாது என்று கூறிய அவர், ஆளுநர் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

இதையடுத்து காவல்துறை தடையை மீறி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினரையும், திருமாவளவனையும் கைது செய்தனர்.

From around the web