கலை மற்றும் அறிவியல் படிப்பு: ஆகஸ்ட் 5 முதல் கலந்தாய்வு
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழக்கத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 4.07 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது, கடந்த ஆண்டை விட 70 ஆயிரம் அதிகமாகும்.
அதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 பேர் முழுமையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 98 ஆயிரத்து 056 பேர் விண்ணப்பக் கட்டணமும் செலுத்தியுள்ளனர். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க முடியும். அதன்படி, தகுதிபெற்ற மாணவர்களின் விவரங்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 163 கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.