இனி அரசியலுக்கு வரமாட்டேன் - நடிகர் நெப்போலியன் திட்டவட்டம்
திமுக காரனாகவே இருப்பேன் ஆனால் அரசியலுக்கு வரமாட்டேன் என நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் 22-ம் ஆண்டு சாதனையாளர் அறிமுகம், அவார்டு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதன் நிறுவனரும் நடிகருமான நெப்போலியன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
அதன் பின் நடிகர் நெப்போலியன் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த 2001 காலகட்டத்தில், வேலை கேட்டு வந்த இளைஞர்களின் நலனுக்காக முதலில் இதை துவங்கினேன். பின்னர் படிப்படியாக சாப்ட்வேர் நிறுவனமாக வளர்ந்தது. சென்னை, அமெரிக்கா என இரண்டு இடங்களில் இயங்கும் இந்த நிறுவனம் விரைவில் திருச்சி, திருநெல்வேலி பகுதியிலும் துவங்கப்படும்.
திமுகவில் கலைஞர் கருணாநிதி எனக்கு குருவானவர் அவரின் ஆசியுடன் திமுக காரனாகவே இருப்பேன். அரசியலுக்கு மீன்டும் வர விருப்பம் இல்லை. அமரிக்காவில் எனது மகனை கவனிக்கும் பொறுப்பில் நானும் எனது மனைவியும் இருப்பதால் அதற்கே நேரம் சரியாக உள்ளது. அங்கு விவசாயமும் செய்து வருவதால் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். சினிமாவில் வாய்ப்பு வருகிறது தவிர்த்து வருகிறேன்.
எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேசிவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் நேரம் கிடைத்தால் அவரையும் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசிவிட்டு அமெரிக்கா திரும்புகிறேன் என்றார்.