அம்மன் கோவில் திருவிழாவில் அசம்பாவிதம்.. கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் ப்ளஸ்-2 மாணவர் உள்பட 3 பேர் பலி!!

நெமிலி அருகே கோயில் திருவிழாவில் கிரேன் அறுந்து விழுந்ததில் ப்ளஸ்-2 மாணவர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் உள்ள மண்டியம்மன் கோவில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியில் பக்தர்கள் கிரேனில் தொங்கி வந்தவாறு சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த கீழ்வீதியைச் சேர்ந்த ப்ளஸ்-2 மாணவர் ஜோதி பாபு (19) கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கீழ்வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துகுமார் (39) என்பவரும் உயிர் இழந்தார். அது மட்டுமின்றி ஐஸ் விற்பனை செய்து கொண்டிருந்த கீழ்ஆவதம் பூபாலன் (40) என்பவரும் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம் அடைந்து நெமிலி அடுத்த புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி வட்டாட்சியர் சுமதி , கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவின் போது விபத்து ஏற்பட்டது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.