மீண்டும் ஆவினில் முறைகேடு? வெளியான அதிர்ச்சி தகவல்

 
Aavin

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் நீலம், பச்சை, ஆரஞ்சு ஆகிய 3 நிறங்களில் பால் விற்பனை செய்யப்படுகிறது. 500 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாக்கெட்டாக இந்த பால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்டதில் 1 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

Aavin

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்ய, முறையான டெண்டர் விடப்படவில்லை. ஏற்கனவே ஆவின் சார்பில் பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்படும் நிறுவனத்தை தவிர்த்து, 1 கிலோவிற்கு 30 ரூபாய் அதிகம் விலை கொடுத்து, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆவினில் ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஆவின் பால் பாக்கெட்டில் அளவை குறைத்து வினியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், சர்வதேச செஸ் போட்டியை வைத்து நடந்துள்ள முறைகேடும் கூடுதல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Aavin

டெண்டர் விடாமல் ‘ஆர்டர்’ கொடுக்க ஆவின் அதிகாரிகளை துாண்டியது யார், எத்தனை ஆயிரம் கிலோ பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்பட்டது, ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை அவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web