பைக் மீது லாரி மோதி காவலர் பலி! சொர்க்கவாசல் திறப்பிற்கு பாதுகாப்பிற்காக சென்ற போது சோகம்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் தாதான்கோட்டை பகுதியில் வசித்து வந்தவர் விஜயகுமார் (34). இவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நாளை திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக விஜயக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் போது கரடிப்பட்டி பிரிவு அருகே எதிரே கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நிஷாத் (27) ஓட்டி வந்த சிமென்ட் லோடு லாரி விஜயகுமாரின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலருக்கு வலது கால் மற்றும் உடல்களில் காயம் ஏற்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காவலரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.