சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடியவர் மீது லாரி ஏற்றிக் கொலை? கரூர் அருகே பரபரப்பு

 
Karur

கரூரில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகளுக்கு எதிராக போராடியவர் மீது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகநாதன். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இதற்கு அருகே செல்வகுமார் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். கல்குவாரி உரிமையாளர் செல்வகுமாருக்கும் ஜெகநாதனுக்கும் நிலப் பிரச்னை தொடர்பாக தகராறு இருந்துள்ளது.

Karur

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஜெகநாதன் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், செல்வகுமார் நடத்திவந்த குவாரியின் உரிமம் முடிந்துவிட்டது. எனினும் சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவந்த கல்குவாரியை மூட வலியுறுத்தி ஜெகநாதன் கனிமவளத்துறைக்கு புகார் மனு அளித்துள்ளார். இதனையடுத்து சமீபத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செல்வகுமாரின் கல்குவாரி மூடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து காருடையாம்பாளையம் என்ற இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜெகநாதன் மீது அந்த வழியாகச் சென்ற கல்குவாரி லாரி ஒன்று மோதியுள்ளது. இதில், பலத்த காயமுற்ற ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Karur

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த க.பரமத்தி போலீசார், ஜெகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெகநாதன் மீது மோதிய லாரி செல்வகுமாருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து  குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் லாரி ஓட்டுநர் சக்திவேல் ஆகிய இருவரும் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கரூரில் சட்ட விரோதமாக இயங்கும் கல் குவாரிகளை எதிர்த்து போராடிய ஜெகநாதனை கல்குவாரி உரிமையாளர் லாரி ஏற்றிக் கொலை செய்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர்.

From around the web