86 விரைவு ரயில்கள் ரத்து.. ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்த பயணிகள்!

 
Egmore

மிகுஜாம் புயல் மற்றும் கனமழை பாதிப்பால், 86-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் பெய்த கனமழையால், எழும்பூர், தாம்பரம், ஆவடி, பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில், ரயில் பாதைகள் நீரில் மூழ்கின. இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் நேற்றைய சேவையில் பெரிதாக மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், சில விரைவு ரயில்கள் பாதுகாப்பு காரணமாக மெதுவாக இயக்கப்பட்டன.

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு நேற்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி விரைவு ரயில் (12007), சென்னை சென்ட்ரல் - கோவைக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை விரைவு ரயில் (12675), சென்னை சென்ட்ரல் - கோவைக்கு நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி விரைவு ரயில் (12243), சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு நேற்று காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய டபுள்டக்கர் ஏசி விரைவு ரயில் (22625), சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு நேற்று காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி விரைவு ரயில் (16057) உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

Express

இவைதவிர, திருப்பதி - சென்னை சென்ட்ரலுக்கு நேற்று காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (16204), கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னை சென்ட்ரலுக்கு நேற்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12028), கோவை -சென்னை சென்ட்ரலுக்கு நேற்றுகாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (20644), கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னைசென்ட்ரலுக்கு நேற்று காலை 6.25மணிக்கு புறப்பட வேண்டிய லால்பாக் விரைவு ரயில் (12608) உட்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையத்துக்கு நேற்று இரவு 9.05 மணிக்கு புறப்பட வேண்டிய நீலகிரி விரைவு ரயில் (12671), சென்னை சென்ட்ரல் - கோவைக்கு நேற்று இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய சேரன் விரைவு ரயில் (12673), சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூருக்கு நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (20601) உட்பட 25 மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

காரைக்குடி - சென்னை எழும்பூருக்கு நேற்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்ட பல்லவன் விரைவு ரயில் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது. இதுபோல, மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று காலை புறப்பட்ட வைகை விரைவுரயில் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது. இந்த 2 ரயில்களும் முறையே செங்கல்பட்டில் இருந்து நேற்று முற்பகல், மாலையில் மீண்டும் புறப்பட்டு சென்றன.

Express

சென்னை சென்ட்ரல்- கோவைக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் உட்பட 86 விரைவு ரயில் சேவைகள் நேற்று மாலை வரை ரத்து செய்யப்பட்டிருந்தன. 3 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. 12 விரைவு ரயில்கள் காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, சென்னை கடற்கரை ஆகியஇடங்களில் இருந்து இயக்கப்பட்டன.

ரயில்கள் திடீர் ரத்து காரணமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வந்திருந்த பயணிகள் தவித்தனர். மாற்று ரயிலுக்காக, அவர்கள் கத்திருந்ததால், சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையில், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முழு கட்டணத் தொகையை பயணிகள் திருப்ப பெற்றுக்கொள்ளலாம் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

From around the web