76 வது குடியரசு நாள் ! சென்னையில் ஆளுநர் கொடியேற்றினார்!!

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி 4வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து வைத்தார்.அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
தொடர்ந்து ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முப்படையை சேர்ந்த அதிகாரிகள், அரசு மற்றும் போலீஸ்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தேசியக்கொடிக்கு வலது கையை உயர்த்தி வணக்கம் செய்து மரியாதை செலுத்தினர். குடியரசு நாள் விழா மேடையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். காந்தியடிகள் காவலர் பதக்கங்களை மொத்தம் 5 பேருக்கு வழங்கப்பட்டது. வீரதீரச் செயலுக்கான 'அண்ணா பதக்கம்' தீயணைப்பு வீரர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து போலீஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் அரசு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் கோலாகலம் நடைபெற்றது. 'தமிழே வாழ்க... தாயே வாழ்க...' என்ற பாடலுக்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் நடனம் ஆடினர். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.