10 வயது சிறுமியை மது குடிக்க வற்புறுத்திய 6 வாலிபர்கள்... தட்டி தூக்கிய காவல்துறை!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிளாலம் பகுதியில் 10 வயது சிறுமி மது குடித்துக் கொண்டே, பீடி புகைப்பது போலவும் எடுக்கப்பட்ட வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. கடந்த மாதம் பரவிய இந்த வீடியோவை பார்த்த பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதற்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமிக்கு இளைஞர்கள் சிலர் மதுவை டம்ளரில் ஊற்றிக் கொடுத்து பீடியை பற்ற வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட குழந்தைகள பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இளைஞர்கள் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த சங்கையா, குமார், ரமேஷ், சிவராஜ், ருத்ரப்பா, அழகப்பன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிவருத்ரப்பா மற்றும் மல்லேஷ் ஆகிய 2 கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இளம் தலைமுறையினர் வளரும் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். அதை விடுத்து தவறான பாதையில் வழி நடத்தி செல்வது வேதனைக்குரிய விஷயமாகும்.