டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பரிதாப பலி.. சென்னையில் பரபரப்பு!

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களது மகன் ரக்சன் (4). இந்த நிலையில் சிறுவன் ரக்சன் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 6-ம் தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ரக்சனை சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுவன் ரக்சன் பரிதாபமாக உயிரிழந்தான். டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதார சீர் கேடு நிலவுகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்கும் வரை இறுதிச் சடங்கு நடைபெறாது என உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.