தனியார் பள்ளியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி.. திருவள்ளூரில் அதிர்ச்சி!!

 
Minjur

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இரண்டு தூய்மை பணியாளர்கள் வந்திருந்தனர். 

dead-body

பேரூராட்சி தூய்மை பணியாளர்களான கோவிந்தன், ஒப்பந்த தொழிலாளர் சுப்பராயலு ஆகியோர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மயங்கி விழுந்த இரண்டு துப்புரவு பணியாளர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். 

Minjur

ஆனால் இறுதியில் கோவிந்தன், சுப்புராயுலு ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பின்னர் மீஞ்சூர் போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web