ராஜபாளையம் அருகே நீச்சல் பழகச் சென்ற 2 குழந்தைகள் பலி.. தந்தை கண் முன்னே சோகம்

 
Keelrajakularaman

ராஜபாளையம் அருகே தந்தையுடன் நீச்சல் பழகச் சென்ற 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பேயம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல். விபத்தில் ஒரு கையை இழந்த இவர், தற்போது கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மதன பிரியா மில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு மோகுல் கிருஷ்ணன் (8) என்ற மகனும் வர்ஷனா ஸ்ரீ (6) என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில், மதன பிரியா நேற்று வழக்கம் போல தனது இரண்டு குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயம் சக்திவேல் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

water

அப்போது லாரி ட்யூபை பயன்படுத்தி தனது இரண்டு குழந்தைகளுக்கும் சக்திவேல் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது இரண்டு குழந்தைகளும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளனர். அந்நேரத்தில் ஒரு கையை இழந்துள்ள சக்திவேலால் தனது குழந்தைகளை காப்பாற்ற இயலாமல் போயுள்ளது. இதையடுத்து அருகே உள்ளவர்களை சக்திவேல் உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வந்து பார்க்கும் முன்னதாக 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

இதையடுத்து உறவினர்களின் உதவியுடன் இரண்டு குழந்தைகளும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழராஜகுலராமன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Keelrajakularaman

இந்நிலையில், இரண்டு குழந்தைகளும் இறந்த சம்பவம் ஊருக்குள் பரவியதை அடுத்து சக்திவேல் வீட்டில் உறவினர்கள் திரண்டு நின்றனர். ஏற்கனவே அந்த கிராமத்தில் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்து வரும் நிலையில், எதிர்பாராத துயர சம்பவம் காரணமாக பொங்கல் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.

From around the web