வரும் 13-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Pudukkottai

முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 13-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிபெருந் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிபெருந் திருவிழா கடந்த 26-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

leave

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்துமாரியம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ம் நாள் (மார்ச் 12) அன்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அதனைத் தொடர்ந்து 9-ம் நாள் திருவிழாவன்று (மார்ச் 13) மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள். மாசிப்பெருந் திருவிழா மார்ச் 13-ம் தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Local-holiday

இந்த நிலையில், வரும் 13-ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அன்று அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 1-ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.

From around the web