பிரதமர் மோடி எப்போ பட்டம் பெற்றார்? நீதிபதிகளிடம் மட்டும் காட்ட பல்கலைக்கழகம் முடிவு!!

நீரஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சி.ஐ.சி., எனப்படும் மத்திய தகவல் கமிஷன், 2016ல் பிறப்பித்த உத்தரவில், '1978ல் பட்டப் படிப்பு முடித்த அனைவரது தகவல்களையும் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இதை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மற்றத் தகவல்களை தருவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், பாதுகாப்பு கருதி பிரதமர் குறித்த தகவல்களை அளிக்க முடியாது' என, முன்னதாக டெல்லி பல்கலை கழகம் கூறியது.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், மற்றவர்களுக்கு காண்பிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் டில்லி பல்கலை தெரிவித்துள்ளது.
டெல்லி பல்கலை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தன் வாதத்தின்போது, டில்லி பல்கலையில், 1978ல் பிரதமர் பி.ஏ., பட்டம் பெற்றார். இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளோம். அதே நேரத்தில் பாதுகாப்பு கருதியும், பிரதமரின் தனிநபர் சுதந்திரம் கருதியும், இந்தத் தகவல்களை மற்றவர்களுக்கு தர முடியாது, என, குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.