என்ன அடி.. ஒரு சேலைக்காக... தலைமுடியை பிடித்து இழுத்து, அடித்து கொண்ட பெண்கள்!! வைரல் வீடியோ

 
Bengaluru

கர்நாடகாவில் ஜவுளி கடையில் ஒரு சேலைக்காக இரண்டு பெண்கள் அடித்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஷ்வரம் பகுதியில் மைசூர் சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடை ஒன்று இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான பல யுக்திகளில் ஒன்றாக, அந்த கடையில் ஆண்டுதோறும் குறைந்த விலையில் புடவைகள் விற்கப்படுவது வழக்கம். இதற்காக பெண்கள் புடவை எடுக்க ஜவுளி கடையில் குவிந்து விட்டனர். அவர்களை வரிசைப்படுத்தி, கடை ஊழியர்களும் காவலர்களும் அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது, திடீரென இரு பெண்களுக்கு இடையே புடவை எடுப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்தும், அடித்தும் மற்றொரு பெண் தாக்குதலில் ஈடுபட்டார். அடிவாங்கிய அந்த பெண் பதிலுக்கு இந்த பெண்ணை துவைத்து எடுத்து விட்டார். அடி பொறுக்க முடியாமல் வலியில் அலறி கொண்டிருக்கிறார்.

Bengaluru

இதனை கடைக்கு வந்திருந்த பெண்கள் அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். அவர்களை விலக்கி விடுவதற்காக கடையில் இருந்த பெண் பணியாளர்களும், காவலர்களும் முயற்சித்தனர். இந்த ரணகளத்திலும், தங்களுக்கு புடவைதான் முக்கியம் என்பது போன்று சிலர் கடையில் தேர்ந்தெடுத்து வைத்திருந்த புடவைகளை வேறு யாரும் எடுத்து விடாமல், அள்ளி வைத்தபடி இருந்தனர்.

ஒரு சிலர் இந்த சண்டையை நகைச்சுவையாக எண்ணி, வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தபடி காணப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கானோர் பார்வையிட்டும் உள்ளனர். அதில் ஒருவர், என்ன நடக்கிறது என்பது பற்றி கூட கவலைப்படாமல் புடவை எடுப்பதில் கவனத்துடன் இருக்கிறார்களே... அவர்களை ரொம்ப பிடித்திருக்கிறது என தெரிவித்து உள்ளார்.


இதேபோன்று மற்றொருவர், இந்த நாட்டில்தான் நிலம், பணம் மற்றும் சேலைக்காக எல்லாம் சண்டை போடும் மக்களை நாம் கொண்டிருக்கிறோம் என தெரிவித்து உள்ளார். ஆனால், ஒருவர் சேலை என்பது வெறும் ஒரு துண்டு துணி அல்ல. அது உணர்ச்சி வாய்ந்தது என்று தெரிவித்து உள்ளார்.

From around the web