மீண்டும் வன்முறை.. மணிப்பூரில் மாவட்ட எஸ்பி அலுவலகம் முற்றுகை.. 2 பேர் பலி!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் நிலப்பரப்பின் பெரும்பகுதியைக் கொண்ட மலை மாவட்டங்களில், பழங்குடியின மக்களான நாகாக்கள் மற்றும் குக்கிகள் வாழ்ந்து வருகின்றனர். அதே போன்று, மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 விழுக்காடு மெய்டேய் சமூகத்தினரும் உள்ளனர். இந்த நிலையில், குக்கி - மெய்தி சமூகங்களுக்கு இடையே இன ரீதியிலான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, வன்முறை மற்றும் மோதலை தடுக்க மணிப்பூரில் மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், குக்கி மற்றும் மெய்தி சமூகங்களில் உள்ள ஆயுதக்குழுக்கள் தொடர்ந்து தாக்குதல், வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.
இதனிடையே, அம்மாநிலத்தின் சர்சந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் (ஹெட் கான்ஸ்டபிள்) சிம்லால்பால் தடைசெய்யப்பட்ட குக்கி ஆயுதக்குழுவினருடன் இணைந்து செயல்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, தலைமை காவலர் சிம்லால்பாலை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.
இந்நிலையில், தலைமை காவலர் சிம்லால்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அவருக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என வலியுறுத்தி குக்கி சமூகத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு சர்சந்த்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, பதற்றம் அதிகரித்த நிலையில் போலீசார் மற்றும் அசாம் ராஷ்டிரிய ரைபில் படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டு வீசியும் போராட்டகாரர்களை விரட்டியடித்தனர்.
Indian Flag handled in high regard by one of the protesters.
— Alice Ngaipilhing (@haokip_alice) February 15, 2024
9 months of state sponsored ethnic cleansing by Biren led government, Center government must ensure the hope of hundreds of its citizens and save us from Meitei Tyranny #ManipurViolence pic.twitter.com/tiTvqiuKiO
இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வன்முறையைடுத்து சர்சந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.