ஆட்டோ மீது லாரி மோதி விபத்து.. தூக்கி வீசப்பட்ட பள்ளி குழந்தைகள்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோவில் இருந்து குழந்தை தூக்கி வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கம் சரத் தியேட்டர் அருகில் இன்று காலை 7 மணியளவில் ஆட்டோ ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாலையின் சந்திப்பின் போது லாரி மீது மோதாமல் இருக்க ஆட்டோ ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி தலைக்குப்புறமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த பள்ளி குழந்தைகள் வெளியில் தூக்கி வீசப்பட்டனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த 8 குழந்தைகளில் 4 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஆட்டோவில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் ஆட்டோவில் அமர்ந்திருந்தனர் என்று தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.