இறுதி சடங்கு செய்ய பணம் இல்லை.. லிவ்-இன் துணைவியின் உடலை சாலையில் விட்டு சென்ற நபர்!

 
Indore

மத்திய பிரதேசத்தில் பணம் இல்லாத காரணத்தால் லிவ்-இன் துணைவியின் உடலை சாலையில் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சந்தன் நகர் பகுதியில் 57 வயது பெண்ணுடன் 53 வயது நபர் ஒருவர், லிவ்-இன் முறையில் 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்.  இந்நிலையில், 3 நாட்களுக்கு முன் அந்த பெண் உயிரிழந்து இருக்கிறார்.  ஆனால், அந்த பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்ய இவரிடம் போதிய பணம் இல்லை.

உடலை வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார்.  அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளிவருகிறது என பக்கத்து வீடுகளில் வசிப்போர் கூறினர்.  இதனால், அந்த உடலை சாக்கு ஒன்றில் திணித்து வைத்து இருக்கிறார்.  

Indore

இந்த 3 நாட்களில் பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறார்.  ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஒருபுறம் பணம் கிடைக்காத விரக்தியிலும், நம்பிக்கையற்ற சூழலிலும், சாக்குடன் இருந்த உடலை சாலையில் விட்டு விட்டு சென்று விட்டார்.  

இதுகுறித்து உதவி காவல் ஆணையாளர் நந்தினி சர்மா இன்று கூறும்போது, அழுகிய நிலையில் சாக்கில் இருந்த உடலை போலீசார் நேற்று கண்டெடுத்தனர். அந்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை.  பிரேத பரிசோதனையில், நீண்ட காலம் அவருக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் இருந்துள்ளன என்பதும், இயற்கையான மரணம் அடைந்து உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது என கூறியுள்ளார்.

Police

போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜ்மொகல்லா பகுதியில் தோட்டம் ஒன்றில் அந்த நபர் இருந்திருக்கிறார்.  அவர் மனதளவில் பலவீனமடைந்து காணப்பட்டார் என போலீசார் கூறினர். அந்த பெண்ணின் இறுதி சடங்கை போலீசாரே இன்று நடத்தியுள்ளனர்.  எனினும், பெண்ணின் மரணம் பற்றி விரிவான விசாரணை நடந்து வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.

From around the web