நிபா வைரசால் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

 
Nipah Virus

கொரோனாவை விட நிபா வைரசால் பாதிக்கப்பட்டோர் உயிரிழக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் ராஜிவ் பால் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருடன் தொடர்பில் இருந்த 1,080 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரை 6 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நிபா வைரஸ் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் ராஜிவ் பால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதற்கான விகிதம் 2 விழுக்காடாக இருக்கும் நிலையில், நிபாவால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைய 40 முதல் 70 விழுக்காடு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

Nipah

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் ஆஸ்திரேலியாவில் இருந்து நோய் எதிர்ப்பு மருந்தான monoclonal antibody மருந்து 20 டோஸ்களை ஒன்றிய அரசு வாங்க இருப்பதாகவும் ராஜிவ் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து, கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் செப்டம்பர் 24-ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிகள், தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களும் அடங்கும். இதற்கிடையில், வாரம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Rajiv Bahl

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக, புதுச்சேரி அரசின் கீழ் உள்ள மாகேயில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இது தொடர்பாக மாகே பிராந்திய மண்டல நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ள உத்தரவில், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நெரிசலான பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாக்கள், கூட்டங்களை ஒத்தி வைக்கலாம் என்றும் அவசியம் என்றால் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை, பூங்கா, வணிக வளாகம் போன்ற இடங்களுக்குச் செல்வதை அதிகபட்சம் தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும்‌ என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சானிடைசர் கொண்டு கைகளை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

From around the web