பாடல் சத்தம்.. இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த தம்பதி.. உத்தரபிரதேசத்தில் பகீர் சம்பவம்!
![UP](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/ec6919727213f492084cd006f589bac5.webp)
உத்தர பிரதேசத்தில் உறவினர்களால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரைச் சேர்ந்தவர் இளம் பெண் சமீனா (23). இவர், கடந்த திங்கள் கிழமை காசியாபாத் சித்தார்த் விகாரில் இருக்கின்ற தன்னுடைய உறவினர்களான ஹீனா மற்றும் ரமேஷ் உள்ளிட்டோரின் மகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதாக தெரிகிறது. ஆகவே சமீனா தான் அவற்றை திருடி சென்றதாக ஹீனாவும், ரமேஷும் சந்தேகத்துள்ளனர்.
இதனால் திருட்டை ஒப்புக் கொள்ளுமாறு குச்சிகள் மற்றும் கம்பிகள் உள்ளிட்டவற்றை வைத்து சமீனாவை தாக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த திருட்டை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக சமீனாவின் உடலை பிளேடால் வெட்டி சித்திரவதை செய்திருக்கிறார்கள். சமீனாவின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினர் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக இசை உரக்க ஒலிக்க விட்டுள்ளனர்.
இந்தக் கொடுமை தாங்க முடியாமல் சமீனா பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக ஹீனா மற்றும் ரமேஷ் உள்ளிட்ட இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ஆனால் வேகமாக சத்தம் வைத்து ஒலித்துக் கொண்டிருந்த பாடலை நிறுத்த மறந்து விட்டனர். 2 நாட்களுக்கு முன்னதாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அன்றைய தினம் அந்த பெண்ணை கொலை செய்த உறவினர்கள் வீட்டிலிருந்து தப்பிச் சென்று விட்ட நிலையில், கடந்த புதன்கிழமை அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டில் 2 நாட்களாக இடைவிடாமல் பாடல்கள் சத்தமாக ஒலிப்பதை கேட்டு சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், இந்த விவரங்கள் அனைத்தும் தெரிய வந்துள்ளது ஆகவே சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.