அசல் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும்.. வங்கிகளுக்கு பறந்த உத்தரவு!

 
RBI

கடன் முடிந்ததும் அசல் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் கடனை முடித்த பிறகு, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஆவணங்களை 30 நாட்களுக்குள் திரும்ப கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த விதிமுறையை மீறினால் நாள் ஒன்றுக்கு ரூ.5,000 என்ற கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு, “அசையும் அல்லது அசையா சொத்துகளின் பேரில் கடன் வாங்கியவர்கள், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அவர்களது அசல் ஆவணங்களை அவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு வரும் உத்தரவுகளில் இதுவும் அடங்கும்.

Loan

கடனை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு அவர்களின் ஆவணங்களை திருப்பிக் கொடுப்பதில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிக்கல்களையும் துயரங்களையும் எதிர்கொள்கின்றனர். கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், வங்கிகள் மற்றம் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மத்தியில் பொறுப்பான கடன் வழங்கும் நடத்தையை மேம்படுத்துவதற்கும் இத்தகைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம்.

கடன் முடிந்ததும், அசல் ஆவணங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு, இடம் ஆகியவை கடன் அனுமதி கடிதங்களில் குறிப்பிடப்பட வேண்டும். தனி நபர் கடன் அல்லது கூட்டுக் கடன் என எதுவாக இருந்தாலும், ஆவணங்களை திருப்பித் தருவதற்கான நன்கு திட்டமிடப்பட்ட நடைமுறையை வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் கொண்டிருக்க வேண்டும். இதனை வங்கிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு, வாடிக்கையாளர்கள் அறியும்படிச் செய்ய வேண்டும்.

Loan

கடன் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களை திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். தாமதத்திற்கு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம் காரணமாக இருந்தால், அது கடன் பெற்றவருக்கு ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் ரூ.5,000 வீதம் ஈடுசெய்ய வேண்டும்.

அதேபோல், அசல் ஆவணங்கள் தொலைந்துபோனாலோ, சேதம் ஏற்பட்டாலோ சான்றளிக்கப்பட்ட நகல்களை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு கடன் வழங்கிய வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம் உதவ வேண்டும். அதோடு, அதற்கான செலவுகளை ஏற்க வேண்டும். மேலும், தாமதத்திற்காக நாளொன்றுக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும். அதேநேரத்தில், விதிவிலக்கான சில நேர்வுகளில் வங்கிகளுக்கு அசல் ஆவணங்களை திருப்பதித் தர கூடுதலாக 30 நாட்கள், அதாவது மொத்தம் 60 நாட்கள் வழங்கப்படும். அதற்குள் அவை அசல் ஆவணங்களை திருப்பித் தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web