கீழே நெருப்பு.. தலித் இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்குதல்.. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்!
தெலுங்கானாவில் ஆடு திருடியதாக குற்றச்சாட்டில் பட்டியலினத்தவர் மற்றும் அவரது நண்பரைக் கட்டி தொங்கவிட்டு நெருப்ப போட்டு சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் மந்தமரி நகரின் அங்காடி பஜாரில் வசித்து வருபவர் ஆடு வியாபாரி கொமுராஜுலா ராமுலு. இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள ஆட்டு கொட்டகையில் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன், மந்தையிலிருந்து ஆடு ஒன்று காணாமல் போனதை ராமுலு கவனித்தார்.
இதனால் ஆடு மேய்க்கும் பொறுப்பில் இருந்த தேஜா (19) மற்றும் கிரண் (30) மீது சந்தேகம் அடைந்து இருவரையும் கொட்டகைக்கு அழைத்துள்ளனர். பின்னர், அந்த 2 இளைஞர்களையும் ஆட்டு கொட்டகையில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளார். மேலும், தீ மூட்டி புகை போட்டு ஆடுகளை திருடியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற கிரண் இரவு வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இதுகுறித்து அறிந்த கிரணின் அத்தை நித்தூரி சரிதா போலீசில் புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
எஸ்சி/எஸ்டிக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ராமுலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெல்லம்பள்ளி ஏசிபி பி.சதையா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டதாக ராமுலு கைது செய்யப்பட்டுள்ளார்.
Two youth hung upside down over smoke pile, beaten in #Telangana over suspicion of #GoatTheft, in #Mandamarri #Mancheria; They were subsequently let off & lodged police complaint; Accused were booked under prevention of atrocities against #SC/ST Act
— Siraj Noorani (@sirajnoorani) September 3, 2023
Via-@umasudhir pic.twitter.com/OBydMmfMAm
மேலும் ராமுலுக்கு அவரது மகன் ஸ்ரீனிவாஸ், அவரது மனைவி ஸ்வரூபா மற்றும் நரேஷ் என்ற தொழிலாளி ஆகியோரின் உதவியுடன் அந்த 2 இளைஞர்களை கடுமையாக தாக்கிய தெரிவந்துள்ளது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.