துணைக் குடியரசுத் தலைவரின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூடான பதில்!!

கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவிகளில் பதவியேற்ற பிறகு அரசியல் ரீதியான கருத்துக்களைப் பேசாமல் தவிர்த்து வந்தனர். ஒன்றிய பாஜக அரசு 2014ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த பிறகு, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் பாஜகவின் பிரதிநிதிகள் போலவே செயல்படுவதாக பரவலான குற்ற்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.
தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் மே.வங்காள ஆளுநராக இருந்த போது அவர் மீதும் அத்தகைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. துணைக் குடியரசுத் தலைவராக ஜகதீப் தன்கர் நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டிப் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளைக் கண்டித்து வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றிய பாஜக அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் துணைக் குடியரசுத் தலைவரின் கருத்து பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார்.
”ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு! தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளை மீற முயலும் எந்த சக்தியையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். துணைக் குடியரசுத் தலைவர், அரசியலமைப்பின் காவலராக இருக்க வேண்டுமே தவிர, ஆளுநர்களின் தவறான செயல்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது. திராவிட இயக்கத்தின் மரபை தொடர்ந்து, மாநில உரிமைகளை காப்போம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.