உலககோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா உலக சாதனை.. இலங்கையை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி

 
SAF

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி துவக்கம் முதலே அதிரடியாக ரன் சேர்த்து வந்தது. துவக்க வீரர் டெம்பா பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த டி காக் - டஸ்ஸன் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. இருவருமே சதம் அடித்தனர்.

டி காக் 84 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டஸ்ஸன் 110 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த எய்டன் மார்கிரம் 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து மிரட்டினார். கிளாசன் 20 பந்துகளில் 32 ரன்களும், டேவிட் மில்லர் 21 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர்.

SAF

தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 428 ரன்கள் குவித்தது. இந்த இமாலய ரன் குவிப்பால் பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்துள்ளது தென்னாப்பிரிக்கா. அதில் முக்கியமானது உலகக்கோப்பை வரலாற்றில் மிக அதிக ஸ்கோரை எடுத்து இருக்கிறது.

இதையடுத்து 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் புகுந்தனர். தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா ரன் ஏதும் எடுக்காமலும், குசால் பெரேரா 7 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இவ்விரு விக்கெட்டுகளையும் மார்கோ ஜான்சன் கைப்பற்றினார்.

SRL

அதிரடி பேட்டிங்கால் இலக்கை துரத்திய குசால் மெண்டிஸ் 42 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். சமர விக்ரமா 23 ரன்னும், சரித் அசலங்கா 79 ரன்களும் எடுத்தனர். கேப்டன் தசுன் ஷனகா 68 ரன்கள் சேர்த்தார். 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணியால் 326 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

From around the web