இத்தனை கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை.. RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் 9 ஆயிரத்து 760 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அன்று நள்ளிரவு முதல் நாட்டின் பணப் புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பணம் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களும் வியாபாரிகளும் திண்டாடி போகினர்.
அதேசமயம், ரிசர்வ் வங்கி புதிய ரூ 500 மற்றும் 2,000 நோட்டுகளை வெளியிட்டது. பணப் புழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் இந்த புதிய ரூ.2,000 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதையடுத்து, 2018-19 நிதியாண்டில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி முற்றிலுமாக நிறுத்தியது.
இந்த நிலையில், பணமதிப்பிழப்பு பிரச்சனைகள் குறைந்துள்ளதாலும், நாட்டின் பண பரிமாற்றத்திற்கு இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதாலும் ரூ. 2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டுகள் செல்லாது அந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் 9,760 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறவில்லை என்றும் இன்னும் அவை புழக்கத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஏறத்தாழ 97.26 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்ட போது நாடு முழுவதும் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், தற்போது வங்கிகளின் டெபாசிட் ஆன தொகையை கழித்ததில் 9 ஆயிரத்து 760 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வராமல் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற விரும்புபவர்கள் அகமதாபாத், பெங்களூரு, பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மத்திய ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களையும் அணுகலாம் எனத் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
மேலும், இந்திய அஞ்சல் நிலையங்கள் மூலமாகவும் மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அனுப்பி அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.