அண்ணனுக்கு உதவிய தங்கை பரிதாப பலி.. பெட்ரோல் போட்ட போது நிகழ்ந்த சோகம்!

 
Karnataka

கர்நாடகாவில் அண்ணன் பைக்குக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்த போது, மின் இணைப்பு இல்லாததால் மெழுகுவர்த்தி பிடித்து உதவிய தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் எடியூரு பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மணா. இவருக்கு ஒரு மகன் மற்றும் 15 வயதில் செளந்தர்யா என்ற மகள் இருந்தார். இவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு மகள் செளந்தர்யா, தனது அண்ணனுக்கு உதவியுள்ளார். சிறுமியின் அண்ணன் வீட்டு வாசலில் இருந்த பைக்குக்கு கேன் மூலம் பெட்ரோல் ஊற்றியுள்ளார்.

அப்போது மின் இணைப்பு இல்லாததால், பெட்ரோல் கீழே சிந்தாமல் பெட்ரோல் டாங்கில் ஊற்ற வெளிச்சம் தேவைப்பட்டுள்ளது. அதற்காக சிறுமி வீட்டில் இருந்த மெழுகுவர்த்தியை ஏற்றி பைக்கின் அருகே சென்று நின்றுள்ளார். அந்த வெளிச்சத்தில் அண்ணன் கேனில் இருந்த பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மற்றொரு பெட்ரோல் கேன் சிறுமி செளந்தர்யாவின் கையில் இருந்ததாக கூறப்படுகிறது.

fire

அந்த சமயத்தில் திடீரென மின் இணைப்பு வந்துள்ளது. அதனால் சற்று பதட்டமடைந்த சிறுமி கையில் இருந்த மெழுகுவர்த்தியையும், பெட்ரோல் கேனையும் ஒன்றாக தரையில் போட்டுள்ளார். இதனால் அங்கு உடனடியாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் என்பதால் அது வழிந்து ஓடிய இடமெல்லாம் தீப்பிடித்துள்ளது. சிறுமியின் மீதும் தீ மளமளவென பரவியுள்ளது.

அதுமட்டுமின்றி வீட்டுக்கு பக்கத்திலேயே லஷ்மணா நடத்தி வரும் மளிகை கடையிலும் தீ பரவி சேதப்படுத்தியுள்ளது. சிறுமியின் அண்ணன் சம்பவத்தை கண்டு அலறவே, அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியை மீட்பதற்குள் 30 சதவீதம் வரை சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவரை உடனடியாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த சிறுமி செளந்தர்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 10) பரிதாபமாக உயிரிழந்தார்.

Dead-body

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அம்ரிதுரு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் தந்தை லஷ்மணா தனது மளிகை கடையில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web