பள்ளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்.. பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகி கைது.. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

மத்திய பிரதேசத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் நவ்ரோஜாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சிறுமியின் தந்தை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அவரது மகளை பாஜகவை சேர்ந்த ராகுல் சித்லானி (25) என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் பாஜகவின் ஐ.டி. பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராகுல் சித்ரானியை கட்சி நியமித்தது. அவரை தற்போது அந்த பதவியில் இருந்து அக்கட்சி நீக்கியுள்ளது.
இதுகுறித்து எப்.ஐ.ஆர். புகாரில், நடப்பு ஆண்டின் கடந்த மார்ச் மாதத்தில் அனுப்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு அவரது மகள் சென்று உள்ளார். அப்போது, ராகுலுடன் அவரது மகள் வீடியோ காலில் பேசியுள்ளார். அதன்பின்பு, வீடியோ காலில் பேசும்போதே, அவதூறு பரப்பி விடுவேன் என சிறுமிக்கு அவர் மிரட்டல் விடுத்து உள்ளார்.
அதன்பின் ஆடைகளை களையும்படி கூறியுள்ளார். அதனால் பயந்து போன சிறுமி, அவதூறு ஏற்படாமல் இருக்க அவர் கேட்ட விசயங்களை செய்து உள்ளார். இதனை தொடர்ந்து நவ்ரோஜாபாத்தில் உள்ள வீட்டுக்கு சிறுமி திரும்பியதும் ஒரு வாரம் கழித்து, அந்த நபர் தொலைபேசி வழியே அழைத்து, ஆடையில்லாத அந்த புகைப்படங்களை காட்டியுள்ளார்.
அதன்பின்னர், தன்னை வந்து எவ்வளவுக்கு எவ்வளவு சந்தித்து, பேசுகிறாயோ அதுவரை பாதுகாப்பாக இருப்பாய். இல்லையெனில் புகைப்படங்களை வைரலாக்கி விடுவேன் என ராகுல் மிரட்டி உள்ளார். தொடர்ச்சியாக சிறுமியை அவர் மிரட்டி வந்து உள்ளார். சிறுமியின் வீட்டுக்கு பின்னால் அவரை சந்திக்க வரும்படி அழைத்தும் உள்ளார். சிறுமி தனியாக இருப்பது பற்றி அறிந்ததும், தவறாகவும் நடந்து உள்ளார்.
சிறுமி பள்ளி கூடத்திற்கும் மற்றும் காய்கறி வாங்க செல்லும்போதும் பின்னாலேயே சென்று உள்ளார். இதனால், அந்த சிறுமி மனஉளைச்சலுக்கு ஆளானார். எனினும் அவதூறுக்காக பயந்து, இந்த விவகாரம் பற்றி யாரிடமும், எதுவும் கூறாமல் இருந்து விட்டார். ஆனால், சிறுமி வீட்டை விட்டே வெளியே வர முடியாதபடிக்கு ராகுல் செய்ததும், நடந்த விசயங்களை தந்தையிடம் கூறியுள்ளார்.
அதன்பின்னர் அவர் போலீசில் இதுபற்றி புகார் அளித்து உள்ளார் என எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது. இந்த வழக்கு பதிவானதும் அவர் தப்பியோடி விட்டார். எனினும் போலீசார் அவரை பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.